நிலக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி மூலம், 7 ஜோடிகள் திருமணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிழகழ்ச்சிக்கு, வத்தலகுண்டு சுழற்சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நிலக்கோட்டை சுழற் சங்கத் தலைவர் ஹரிஷ் ராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், சென்னை, வேலூர், ராமநாதபுரம், தேனி, ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மணமகன்கள் 50 பேரும், மணமகள்கள் 10 பேரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இதில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி அல்லாத பட்டதாரி பெண் ஜெய்சிராணி என்பவர், மாற்றுத் திறனாளியான ராமநாதபுரத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தியை தேர்வு செய்தார்.
தொடர்ந்து, கண் பார்வை இழந்த இசை ஆசிரியர்களான புதுக்கோட்டை செல்வம், திருச்சி கோமதி ஜோடி ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
இதில், ராமநாதபுரம், வேலூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாற்றுத் திறனாளி ஜோடிகள் திருமணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஜோடிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி கடலூரில் சீர்வரிசையுடன் திருமணம் நடைபெறும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், வேடசந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் தீபக், மாநில துணைத் தலைவர்
மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.