பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காளிபாளையத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் மகன் முகமது பாசில் (19). இவரும், இவரது நண்பரான யாசரும் சேர்ந்து, பக்ரீத் பண்டிகைக்கு ஆடு வாங்குவதற்காக கீரனூரை அடுத்த தாளையூத்துக்கு வேனில் சென்றுள்ளனர். மேல்கரைப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதி நொறுங்கியது. இதில், முகமது பாசில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கீரனூர் போலீஸார், முகமது பாசிலின் சடலத்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பலத்த காயமடைந்த யாசரை சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.