கொடைக்கானல் பூண்டுக்கு தனி சந்தை அமைத்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தொழில் நுட்பக்கழக மாநில மன்ற உறுப்பினர் செயலர் சீனிவாசன் தெரிவித்தார்.
கொடைக்கானல் பூண்டிற்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியிலுள்ள இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறுத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், தொழில் நுட்பக்கழக உறுப்பினர்கள், மேல்மலைக் கிராம விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந் நிலையில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கூட்டம் நடைபெற்றது. இதில் வானிலை ஆய்வக ஆய்வாளர் எபினேசர் தலைமை வகித்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியர் உஷா ராஜா நந்தினி வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு தொழில் நுட்பக்கழக மாநில மன்ற உறுப்பினர் செயலர் சீனிவாசன் பேசியதாவது: கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார்குறியீடு பெறப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் பூண்டு சாகுபடி செய்ய வேண்டும். கொடைக்கானல் மலைப்பூண்டு என்ற வணிக முத்திரையுடன் நகரத்தில் சந்தை அமைத்து உலக அளவில் மலைப்பூண்டை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில் நுட்ப உறுப்பினர்கள்,மேல்மலைக் கிராம விவசாயிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.