தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு 4 தேவியருடன் சுவாமிக்கு திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடிப் பெருந்திருவிழா, கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல், ஒவ்வொரு நாள் இரவும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனத்தில், செளந்தரராஜப்பெருமாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
திருக்கல்யாணம்:
ஆடிப் பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்று, செளந்தரவள்ளித் தாயார் சன்னிதிக்கு, மாப்பிள்ளையாக அழைத்துச் செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இரவு 8 மணி வரை நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின், ஸ்ரீதேவி, பூதேவி, செளந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய நான்கு தேவியருடன், செளந்தரராஜப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த பெருமாளை தரிசனம் செய்தனர்.
இரவு 9.30 மணிக்கு மேல் செளந்தரராஜப் பெருமாள், பூப்பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோன்று வடமதுரை செளந்தரராஜப் பெருமாள் கோயிலும் ஆடித்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு செளந்தரவள்ளித் தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் செளந்தரராஜப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.