பழனியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து குளம், ஆறுகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம். பழனி பகுதியில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் சண்முகநதியில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன. இதற்காக பழனி அடிவாரம் மயிலாடும்பாறை பகுதியில் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட சிலை வடிவமைப்பு தொழிலாளர்கள் சிலைகளை செய்து வருகின்றனர். எளிதில் நீரில் கரையும் வகையில் களிமண், அட்டைகள் மற்றும் சுண்ணாம்பு கலவைகளை கொண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. புல்லட் விநாயகர், ராக்கெட் விநாயகர், மான் வாகன விநாயகர் என பல்வேறு விதவிதமான விநாயகர் சிலைகள் கண்ணைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருவதை பலரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.