கொடைக்கானல் போலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரி அச்சங்கத்தின் உறுப்பினர்கள் 7 பேர் பழனியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.
கொடைக்கானல் போலூர் ஊராட்சியில் போலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைவராக பதவி வகித்து வருபவர் மாரிமுத்து. மொத்தமுள்ள 11 உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வாக்களித்து மாரிமுத்துவை தலைவராக தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், உறுப்பினர்கள் சண்முகம், சுரேஷ், பிச்சைமணி, விஸ்வநாதன், சரோஜா, பூங்கொடி மற்றும் துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் சங்கத்தின் தலைவர் மாரிமுத்துவை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு அளித்தனர். அதில், வங்கித் தலைவர் மாரிமுத்து கடந்த ஓர் ஆண்டாக முறையாக கூட்டம் நடத்துவதில்லை, உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் எந்த செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை, சங்கத்தின் நலனுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொள்வதால் தலைவர் மாரிமுத்துவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.