அய்யலூர் அருகே செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் மளிகை கடைக்காரர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், கடவூர் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(50). திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அடுத்துள்ள சுக்காம்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். சுக்காம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அய்யலூர் நோக்கி செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். அய்யலூர் அருகே, திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி, மாரியப்பன் இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார். தீவிர சிகிச்சைக்காக மாரியப்பன் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். விபத்து குறித்து வடமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.