பழனி மலைக்கோயிலில் போலீஸார் தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் பழனியில் பேருந்து நிலையம், அடிவாரம் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி மற்றும் தொடர் விடுமுறை மற்றும் திருக்கார்த்திகை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து பழனி பேருந்து நிலையம், கோயில் அடிவாரம் பகுதிகளில் போலீஸார் கூடுதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பழனி மலைக்கோயிலின் படிவழிப்பாதை, இழுவை ரயில் (வின்ச்) நிலையங்களில் பக்தர்கள் வரும் பாதையில் உள்ள கண்காணிப்பு கருவிகள் அமைக்கப்பட்டு அதன் வழியே பக்தர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகளை கோயில் பணியாளர்கள் மற்றும் போலீஸார் "மெட்டல் டிடெக்டர்' கொண்டு பரிசோதித்த பின்னரே மேலே செல்ல அனுமதித்தனர்.
மலைக்கோயிலில் ராஜகோபுரம், தங்க கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதமேந்திய போலீஸாரும், கோயில் பாதுகாவலர்களும் கூடுதல் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பழனிக் கோயில் தவிர பேருந்து நிலையம், ரயில்நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் சாதாரண உடைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல்
நீங்கும் வரை இந்த கண்காணிப்பு தொடரும் என காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல்: இதே போல் கொடைக்கானல் மலைப்பகுதிகளான வட்டவடை, கிளாவரை, வாழைக் காய் ஓடை,மற்றும் கேரளாவனப் பகுதிகளையொட்டியுள்ள பகுதிகளில் அதிரடிப்படை போலீஸார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை காட்ரோடு-பழனி மலைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனைச் சாவடியிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.