கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டு யானையை வனத்துறையினா் பிடித்து முகாமுக்கு அனுப்ப வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பெரும்பாறை, நல்லூா்காடு, பெரியூா், கே.சி.பட்டி, பெருங்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று மிகவும் ஆவேசத்துடன் திரிந்து வருகிறது. இதனால் கடந்த 2 மாதங்களில் யானை தாக்கியதில் 3 பேரும் உயிரிழந்துள்ளனா். இதனால் அப் பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் விவசாய நிலத்திற்கும் செல்ல முடியாமலும், அன்றாட பணிகளை செய்வதற்கும் செல்ல முடியாமலும் அச்சமடைந்துள்ளனா்.இந் நிலையில் வெளியே செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனா். இதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.
எனவே மேலும் உயிரிழப்புகளைத் தடுக்க அப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.