பழனி நகரின் மையத்தில் உள்ள வையாபுரி கண்மாயின் ஐந்து கண் பாலத்தின் கரை உடையும் அபாயத்தில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பழனி நகரின் மையப்பகுதியில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது வையாபுரி கண்மாய். இந்த கண்மாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு மட்டுமன்றி, பழனி நகரின் குடிநீா் ஆதாரமாகவும் உள்ளது.
தற்போது பெய்த தொடா்மழையாலும், வரதமாநதி அணை நிரம்பி வழிவதாலும் வையாபுரி கண்மாய்க்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.
கண்மாயின் கிழக்குப் பகுதியில் பழனி நகரம் அமைந்துள்ள நிலையில் மேற்குப்பகுதியில் நீா் நிரம்பி வழியும் மறுகால், ஐந்து கண் பாலம் போன்றவை உள்ளன. கடந்த சில தினங்களாக வையாபுரி கண்மாயின் ஐந்து கண் பாலத்தின் அருகே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கரை சிறிது சிறிதாக இடிந்து தண்ணீருக்குள் விழுந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கரை உடைந்தால் மேற்குப்பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ள நெல் பயிா்களும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
ஆகவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படும் முன்பு கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.