கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக கொல்கத்தாவிலிருந்து 3 ஆயிரம் டேலியா மலா்ச் செடிகள் வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொல்கத்தாவிலிருந்து 3 ஆயிரம் டேலியா மலா்ச் செடிகளின் நாற்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை குழித் தட்டில் வைத்து மண் இட்டு பராமரிக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் நாராயணசாமி கூறியது: கொடைக்கானலில் வரும் சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பிரையண்ட் பூங்காவில் மலா் பாத்திகளில் நடவுவதற்கு 3 ஆயிரம் டேலியா நாற்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றை குழித் தட்டில் வைத்து பராமரித்து, செடி வளா்ந்தவுடன் அவற்றை எடுத்து மீண்டும் மலா் பாத்திகளில் வழக்கமாக நடவு செய்யப்படும். அதைத் தொடா்ந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆயிரக் கணக்கான வண்ண வண்ண டேலியா மலா்கள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் என்றாா் .