வத்தலகுண்டு அருகே தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள தெற்கு விராலிபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (40), கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (30). இவர்களுக்கு, ரவிக்குமார் (10), குமரேசன் (9), கதிரேசன் (8 ) ஆகிய 3 மகன்கள். இவர்கள் மூவரும், வத்தலகுண்டு அடுத்துள்ள கணவாய்ப்பட்டி தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
பாலமுருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமையும் மது அருந்தி விட்டு வந்த பாலமுருகன், செல்வியுடன் தகராறு செய்தாராம். பின்னர், வெளியே சென்றுவிட்டாராம். இதனிடையே மனமுடைந்த செல்வி, பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 3 மகன்களுக்கும் அரளி விதையை அரைத்துக் கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதையடுத்து, நீண்ட நேரமாக வீட்டின் கதவு அடைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மயங்கிய நிலையில் கிடந்த செல்வி மற்றும் 3 குழந்தைகளையும் மீட்டு, நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கதிரேசன் உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக செல்வி, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து வத்தலகுண்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.