ஒட்டன்சத்திரத்தில் 1,042 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, வனத் துறை அமைச்சர் சி. சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். இதில், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் கலந்துகொண்டு, தாலிக்கு தங்கம், தையல் இயந்திரம், விலையில்லா ஆடுகள், விலையில்லா கோழிகள், விலையில்லா வீட்டுமனைப் பட்டா, தேய்ப்புப் பெட்டி, விலையில்லா மிதிவண்டி, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் மற்றும் முதியோர் உதவித்தொகை என மொத்தம் 1,042 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினார். இந்த நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.