இரட்டை கொலை வழக்கு: தொழிலாளி கைது

பழனி அருகே இரட்டை கொலை வழக்கில் சமையல் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

பழனி அருகே இரட்டை கொலை வழக்கில் சமையல் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் இடும்பன் கோயில் வாய்க்கால் அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன் இளைஞர் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பழனி நகர போலீஸார் வழக்குப்பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்ட நபர் திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துமால் மகன் லெனின் (36) என்பதும், மின்சார வாரியத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், லெனின் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிக்கு செல்லாமல், சமையல் வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவருடன் பணிபுரிந்த சமையல் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியதில் லெனினை கொலை செய்தது அவரது நண்பரான மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த குருசாமி மகன் குமார் (35) என்பது உறுதியானது. 
 பின்னர், போலீஸார் குமாரைப் பிடித்து விசாரித்தனர். இதில், கொலை செய்யப்பட்ட லெனினும், குமாரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பழனி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, அங்கு கேபின்மேனாக பணிபுரிந்து வந்த முருகேசன் என்பவர் புதுநகர், சங்கிலிகேட் பகுதி ரயில்வே காலனியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றார் என்றும், அங்கு இருவரும் சேர்ந்து முருகேசனை கொலை செய்து விட்டு, வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. 
 கொலை செய்த இருபது நாள்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் பழனி வந்ததும், பைபாஸ் சாலையில் அமர்ந்திருந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் குமார் கல்லை எடுத்து லெனின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, குமாரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com