தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பழனி மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.
சமீபத்தில், சேலம் மாவட்டம், திருச்செங்கோட்டில் இந்திய தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுக் கழகம் சார்பில், தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு வயது பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், பழனியை அடுத்த சத்திரப்பட்டி புதுக்கோட்டை ட்ரம்ப் பள்ளியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு மாணவர் ஆறுமுகம் (9) ஒற்றைக் கம்பு வீச்சில் தங்கப் பதக்கமும், கம்புச் சண்டையில் வெண்கலப் பதக்கமும் வென்றார். அதேபோல், மஞ்சநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவர் ராஜசேகரன் (13) வேல் கம்பு வீச்சில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டினர்.