பழனி அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் "பிரிகேஜி' மாணவரை தன் கண் முன்பே, பள்ளியின் தாளாளர் தாக்கியதாக வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மாணவரின் தந்தை செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
பழனியை அடுத்த அக்கரைப்பட்டியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் "பிரிகேஜி' பயிலும் சிறுவன் அமர்நாத்தை (3) அவரது தந்தை சித்திரைக்கனி திங்கள்கிழமை காலை பள்ளிக்கு அழைத்து வந்தார்.
ஆனால், நீண்ட நேரம் யாரும் வரவில்லையாம். இந்நிலையில் சிறுவனுக்கு உடல்நலக்குறைவாக இருந்ததால், பள்ளியில் இருந்த ஆயாவிடம் விட்டுவிட்டு சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளி தாளாளரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு நீண்ட நேரமாகியும் ஏன் ஆசிரியர்கள் யாரும் வரவில்லை என்றும் கேட்டுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு மகனை அழைத்து சென்ற சித்திரைக்கனியை பள்ளியின் தாளாளர் தரக்குறைவாக பேசியதோடு அமர்நாத்தை அவரது தந்தையின் கண்முன்பே அடித்தாராம். இதுகுறித்து சித்திரைக்கனி வட்டாரக் கல்வி அலுவலர் ராஜாமணியிடம் புகார் செய்துள்ளார். அதன்பேரில் பள்ளிக்கு வந்த ராஜாமணி, பள்ளியின் தாளாளரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர், இதுதொடர்பாக எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்குமாறு சித்திரைக்கனியிடம் தெரிவித்துவிட்டு சென்றார். இச்சம்பவத்தால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.