பழனியில் புதன்கிழமை வேன் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பழனி அடிவாரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). வாடகை வேன் ஓட்டுநர். புதன்கிழமை மாலை தனது வேனில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், வேனை மறித்து சோதனை செய்தார். அப்போது மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கான அனுமதி இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளரிடம், பாலகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர், நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீஸார் பாலகிருஷ்ணனை நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது பாலகிருஷ்ணன் விஷ மருந்தை சாப்பிட்டு விட்டாராம். இதனைத்தொடர்ந்து போலீஸார் பாலகிருஷ்ணனை சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.