நத்தம் - துவரங்குறிச்சி இடையே 4 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம், செந்துறை வழியாக துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில், முதல்கட்டமாக மதுரை முதல் நத்தம் வரை 36.43 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதன்தொடர்ச்சியாக நத்தம், புதுப்பட்டி, குட்டுப்பட்டி, கருத்தலக்கம்பட்டி வழியாக துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், 4 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய நிலங்களை பாதுகாக்கக் கோரியும், திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக நத்தம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது: நத்தம் முதல் துவரங்குறிச்சி வரை 23 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த நிலங்கள் பெரும்பாலும் விளை நிலங்களாக உள்ளன. மேலும், மா, தென்னை உள்ளிட்ட மரப் பயிர்களும் உள்ளன. சாலை அமைப்பதற்காக இந்த நிலங்களை கையகப்படுத்துவதினால், விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் சூழல் உள்ளது.
எனவே, இப்பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றனர்.