பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் கடந்த 14 நாள்களில் ரூ. 2.18 கோடியை தாண்டியது.
புத்தாண்டு மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகை காரணமாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 14 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின. அதையடுத்து வியாழன், வெள்ளிக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இப்பணியில் கல்லூரி மாணவியர், ஆசிரியர்கள், கோயில் அலுவலர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இருநாள் எண்ணிக்கையில் உண்டியல் காணிக்கை வரவு ரொக்கம் ரூ. 2 கோடியே 18 லட்சத்து 96 ஆயிரத்து 690 கிடைத்தது. தங்கம் 463 கிராமும், வெள்ளி 14,970 கிராமும் கிடைத்தன.
மேலும், பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 400 கிடைத்தன. காணிக்கை எண்ணும் பணியின்போது பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.