ஒட்டன்சத்திரம் அருகே மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆள்களை ஏற்றிச்சென்ற மினி சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகாடு ஊராட்சியில் உள்ள மலைக்கிராமம் சிறுவாட்டுகாடு. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு பேருந்து வசதி கிடையாது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலூர் செல்லும் பேருந்தில் ஏறி பெத்தேல்புரத்தில் இறங்கி நடைபயணமாக சிறுவாட்டுகாடுக்கு செல்லலாம். அதே போல பெத்தேல்புரத்தில் இருந்து அந்த வழியே செல்லும் வாகனங்களில் செல்லலாம்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூர்களில் இருந்து வந்த சிறுவாட்டுகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பெத்தேல்புரத்தில் இருந்து மினி சரக்கு வேனில் சிறுவாட்டுகாடுக்கு பயணம் செய்தனர். அந்த சரக்கு வேன் கும்மலாமரத்துப்பட்டி வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சிறுவாட்டுக்காட்டைச் சேர்ந்த நாகவேல் (63), அவரது மகள்கள் ரெங்கராணி (30), வனிதா (25), மினிவேன் ஓட்டுநர் மதன் (19), திருப்பதி (30), மனோபாலா (9), மகாலட்சுமி (11), நாராயணசாமி (62), நவநீதன் (40), நாகலட்சுமி (33), கிருஷ்ணமூர்த்தி (40) ஆகியோர் உள்பட 18 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், வனிதா, ரெங்கராணி, நாகவேல், மதன், தனலட்சுமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.