பொங்கல் பண்டிகை, தைப்பூசம் கொடியேற்றம்: பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
தைப் பொங்கல் மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பழனியில் கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே பக்தர்கள் கூட்டம் களைகட்டுவது வழக்கம். அதிலும், தை முதல் நாளுக்கு என குறிப்பிட்ட ஊர்களிலிருந்து பக்தர்கள் கூட்டமும், தைப்பூசத்துக்கு என குறிப்பிட்ட பக்தர்கள் கூட்டமும் வருவது வழக்கம். இதனால், பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படும்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொங்கல் திருநாள், தை மாதத்தின் முதல் நாள், பழனி தைப்பூசத் திருவிழா கொடியேற்றம், தொடர் விடுமுறை என அனைத்தும் ஒன்றுசேர்ந்து வந்ததால், பழனி நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திணறியது.
பழனி பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பக்தர்கள் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் திண்டாடினர். வயதானவர்கள், குழந்தைகளுடன் பெற்றோர்கள் என பலரும் பேருந்தில் இடம்பிடிக்க பேருந்துகளுடன் ஓடினர். இதேபோல், ரயில் நிலையத்திலும் நடைமேடை முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. பக்தர்கள் ரயிலில் நின்றபடியே அவரவர் ஊர்களுக்கு பயணித்தனர்.
இதனால், நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. பலர் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் தவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பல விடுதிகளிலும் இருமடங்கு, மூன்று மடங்கு என கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பேருந்து கிடைக்காமல் பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குழந்தைகளுடன் பனியில் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.