பழனி அருகே வேன் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற கூட்டுறவு சங்கச் செயலர் உயிரிழந்தார்.
பழனியை அடுத்த சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் கதிரவன் 50 . இவர், பாலசமுத்திரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை, இவர் சத்திரப்பட்டியில் இருந்து பாலசமுத்திரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, வாய்க்கால் பாலம் அருகே எதிரே வந்த தனியார் பள்ளிக்கு ஒப்பந்த அடிப்படையில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேன் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த கதிரவன், பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி கதிரவன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.