பழனியில் புதிதாக கட்டப்படும் கோயிலை நகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் அகற்ற வந்ததைக் கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அம்பலகாரர் தெருவில் பொதுமக்கள் வணங்கி வந்த கல் சிலைக்கு அப்பகுதி மக்கள் சேர்ந்து சிறிய விநாயகர் கோயிலை கட்டி வருகின்றனர். கோயில் பொது இடத்தில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்படுவதாக கூறப்பட்ட புகாரின் பேரில் நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆக்கிமிப்பு அகற்றுவதற்காக போலீஸாருடன் வந்தனர்.
இந்நிலையில் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கோயிலைச்சுற்றி நின்றனர். இதனால் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், சிவகாமி என்பவர் மயக்கமடைந்தார்.மேலும் கார்த்திகா என்பவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக போலீஸார் அவரை தடுத்து அவர்மீது தண்ணீரை ஊற்றினர். தகவலறிந்து இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஜெகன் தலைமையில் ஏராளமானோர் மக்களுக்கு ஆதரவாகக் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து பழனி டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீஸார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக நடவடிக்கையை நிறுத்துவதாகவும், பொதுமக்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றிக் கொள்ளுமாறும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.