பழனியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சிஐடியூ தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி குளத்து புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ கன்வீனர் பிச்சமுத்து தலைமை வகித்தார்.
இதில் 2017 சாலைப்போக்குவரத்து சட்டத்தை அமல்படுத்தக் கூடாது, பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி., வரிக்குள் கொண்டு வர வேண்டும், காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தக்கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பவும், குறைந்த பட்ச ஊதியம் 21 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கவும், வாடகைக்கார் ஓட்டுபவர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கவும், தனியார் வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடுத்து நிறுத்தவும் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் சாலைப்போக்குவரத்து சங்க உறுப்பினர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உறுப்பினர்கள், பழனி தாலுகா இருசக்கர மோட்டார்சைக்கிள் பழுது நீக்கும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.