பழனியில் மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறந்து பொருள்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக நகராட்சி ஆணையர் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக மகளிர் சங்கம் தெரிவித்துள்ளது.
பழனியில் 3,4,24,30 ஆகிய வார்டுகளில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடைகளுக்கு கட்டடம் கட்டப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளதால், அவை நாளுக்கு நாள் பழுதாகி சமூகவிரோதிகளின் இருப்பிடமாகவும் மாறி வருவதாக புகார் எழுந்தது. இதையொட்டி ஜனநாயக மாதர் சங்கத்தினர் புதன்கிழமை பொதுமக்களை திரட்டி கடைகளை திறக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதையடுத்து திங்கள்கிழமை பழனி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் நாராயணன், பழனி நகர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராணி, நகர தலைவர் பூமதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் 4 ரேஷன் கடைகளையும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.