திண்டுக்கல்லில் எண்ணெய் லாரி டேங்குக்குள் மயக்கமடைந்த நிலையில் இருந்த 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்தவர் தனபால். இவர், திண்டுக்கல் சிட்கோ தொழில்பேட்டையில் கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில், பல்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட கழிவு எண்ணெய், இந்த ஆலைக்கு டேங்கர் லாரி மூலம் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது. டேங்கர் லாரியிலிருந்து எண்ணெயை எடுத்த பின், டேங்குக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில், கொடைரோடு செட்டியப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (48) என்ற தொழிலாளி ஈடுபட்டுள்ளார். டேங்கிலிருந்து அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததை அறிந்த அங்கு காவலாளியாகப் பணிபுரியும் மேற்கு மரியநாதபுரம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (75), லாரி மீது ஏறியுள்ளார். அப்போது, அவர் கால் தவறி டேங்குக்குள் விழுந்துள்ளார். அங்கு, முருகேசன் மயங்கிக் கிடப்பதைப் பார்த்த அவர், டேங்க்கை தட்டி ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த தொழிலாளர்கள், டேங்குக்குள் மயங்கிக் கிடந்த செல்வராஜ் மற்றும் முருகேசனை மீட்டனர்.
உடனே, இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விஷ வாயு தாக்கி மயக்கம் அடைந்திருக்கலாம் என, திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.