பழனி மலைக்கோயிலில் சந்திரகிரஹணத்தை முன்னிட்டு வருகிற 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு இராக் கால பூஜை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 1.32 மணி முதல் அதிகாலை 4.29 மணி வரை சந்திரகிரஹணம் நிகழ்கிறது. ஆகவே, அன்றைய தினம் மலைக்கோயிலில் இரவு 8 மணிக்கு இராக்கால பூஜை நடத்தப்பட்டு, 9.30 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நிறைவு செய்யப்பட்டு தங்கக்கதவு, வெள்ளிக்கதவு திருக்காப்பிடப்படும்.
மறுநாள் புதன்கிழமை
(ஜூலை 17) காலை 5 மணிக்கு உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், பாரவேல்மண்டபம் மற்றும் மகாமண்டபம் சுத்தம் செய்யப்பட்டு சம்ரோக்சன பூஜை, ஹோமம் ஆகியன நடத்தப்பட்டு வழக்கம் போல விளாபூஜை நடத்தப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட அனைத்து உபகோயில்களிலும் இரவு 9.30 மணிக்கு சன்னிதி திருக்காப்பிடப்பட்டு காலையில் சம்ரோட்சண பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.