பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாத 24 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் பழனி நகர், ஒன்றியம், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பழனி நகரச் செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில் ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலாளர் துரைராஜ், பழனி ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா, மற்றும் உயரம் தடைபட்டோர் மாநில செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இக் கூட்டத்தில், அரசு அலுவலகங்களில், பேருந்து நிலையங்களில் வெளிநாட்டு கழிப்பறை வசதி, சாய்வுதளத்துடன் கைப்பிடி வசதி, உள்ளாட்சி கடைகளில் முன்னுரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்துவது என்றும், இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை திரட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நகரப் பொருளாளர் வெள்ளியங்கிரி நன்றி கூறினார்.