பழனியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி கட்ட பொதுமக்களிடம் வாங்கிய நிலத்துக்கான இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், நீதிமன்ற உத்தரவின் பேரில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொருள்களை ஜப்தி செய்ய செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணியாளர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி தட்டான்குளம் புதுநகர் பகுதியில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக தமிழக அரசு கடந்த 1988 ஆம் ஆண்டு வருவாய்த்துறை மூலமாக சுமார் 40 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட 40 பேருக்கு ஏக்கருக்கு தலா ரூ.75 ஆயிரம் என்ற நிலமதிப்பில் பாதித் தொகை வருவாய்த்துறை மூலம் முதல் கட்டமாக கடந்த 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகை குறைவாக இருந்ததைத் தொடர்ந்து அரசுக்கு நிலம் வழங்கியவர்கள் பழனி சார்பு நீதிமன்றத்தில் முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் என்ற மதிப்பில் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கடந்த 1996 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை மீதித்தொகையை யாருக்கும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி 15 சதவீத வட்டியுடன் இழப்பீட்டுத் தொகை ரூ.3 கோடியை நெருங்கியதால் நீதிமன்ற பணியாளர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்திக்காக வந்தனர். அப்போது 10 நாள்கள் அவகாசம் கேட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து நீதிமன்ற பணியாளர்கள் திரும்பிச் சென்றனர். ஆனால் இதுவரை இழப்பீடுத் தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சார்பு நீதிபதி கணேசன் உத்தரவின் பேரில் மீண்டும் சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு நீதிமன்ற பணியாளர்கள் வந்தனர். அவர்களிடம் சார் ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு மாத காலம் அவகாசம் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து நிலம் வழங்கியவர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் திரும்பிச் சென்றனர்.