திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே பாதியில் நிற்கும் தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, விவசாயிகள் இம்மாதம் 20-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் பழனிக்குமார், மாநில பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வத்தலக்குண்டு அருகே 10 கிராமங்களின் குடிநீர் ஆதாரத்திற்காக உச்சப்பட்டி-குளிப்பட்டி இடையே மருதாநதி ஆற்றில் கட்டப்பட்டு பணிகள் பாதியில் நிற்கும் தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இப்பணியை உடனே தொடங்கா விட்டால் இம்மாத 20 ஆம் தேதி உச்சப்பட்டியில் விவசாயிகள் ஒன்று திரண்டு சாலை மறியல் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து இளங்கோவன் கூறியது:
10 கிராமங்களில் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கிறார்கள். விவசாய பயிர்கள் கருகி கொண்டிருக்கின்றன. அதிகாரிகளிடம் தடுப்பணையை தொடர்ந்து கட்டக்கோரி பலமுறை புகார் செய்தும் பலனில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார்.
இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி செயலாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.