நத்தம் அடுத்துள்ள மங்களப்பட்டி, வலசுப்பட்டி, சீகம்பட்டி ஸ்ரீவேங்கை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 11ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. 4 ஆம் கால யாக பூஜைக்கு பின் காசி, ராமேசுவரம், அழகர் கோவில், முடிமலையாண்டவர் பெருமாள்கோயில், காவிரி, திருமலைக்கேணி, கரந்தமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர், மேள தாளம் முழுங்க கோயில் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீவேங்கை விநாயகர் சன்னிதியைத் தொடர்ந்து, ஸ்ரீசுப்பிரமணியர், சிவன், நவகிரக சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேகம்
நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.