முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஜூலை 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) சுப்புராஜ் தெரிவித்துள்ளதாவது: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயதுக்குள்பட்ட தலா 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுடன் ரூ. 50,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 15-8-2019 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இதற்கு, 15 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
எனவே, 1-4-2018 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31-3-2019 அன்று 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் (2018-19) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அந்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுவோர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலிக்கப்படும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் WWW.SDAT.TN.GOV.IN என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். நகல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் 2-7-2019-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்துள்ள மாவட்ட விளையாட்டரங்கம் அலுவலகத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு இது தொடர்பான விவரங்களை பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.