பழனியில் மகளிருக்கான மாநில அளவிலான ஜூனியர், சீனியர் பளுதூக்கும் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கார்த்திக் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் மற்றும் பகத்சிங் ரத்த தான கழகம் சார்பில் இப்போட்டிகள் நடைபெற்றன.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். போட்டிகளை கந்தவிலாஸ் பாஸ்கரன் தொடக்கி வைத்தார்.
இதில், திண்டுக்கல் அர்னால்டு மல்டி ஜிம் முதலிடமும், பழனி ஹெல்த் பிட்னஸ் ஜிம் இரண்டாமிடமும், திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரி மூன்றாமிடமும் பெற்றன.
திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியை சேர்ந்த அருண்ராஜ் ஆண்கள் பிரிவில் சிறந்த வீரர் ஆகவும் பழனி சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியை சேர்ந்த தேன்மொழி பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பல்வேறு பிரிவுகளில் சாம்பியன் பட்டம் பெற்றோருக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து வழங்கினார்.
பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்க செயலர் நாகவடிவேல் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.