நடுவர் நீதிமன்ற பெண் நீதிபதியை கண்டித்து வழக்குரைஞர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா குற்றவியல் நடுவர் நீதிமன்றப் பணியை புறக்கணித்து

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா குற்றவியல் நடுவர் நீதிமன்றப் பணியை புறக்கணித்து வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலக்கோட்டை தாலுகா குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள பெண் நீதிபதி குடியேறியுள்ளார். அதற்காக, நீதிபதியின் வீட்டுப் பொருள்களைக் கொண்டு வந்த பணியாளர் ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த வழக்குரைஞர்கள் நடுவில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாராம். இதில், வழக்குரைஞர்கள் சிலர் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
பின்னர், திங்கள்கிழமை இரவு வழக்குரைஞர்கள் சிலர் எந்தவித அனுமதியுமின்றி நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்துக்குள் புகுந்து பெண் நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இதனால், அவர் அனுமதியின்றி உள்ளே வந்த வழக்குரைஞர்களைக் கண்டித்து, எச்சரித்து அனுப்பியுள்ளார். அதையடுத்து, நீதிபதியை கண்டித்து நிலக்கோட்டை நான்கு ரோட்டில் வழக்குரைஞர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற டி.எஸ்.பி. பாலகுமார் மற்றும் போலீஸார் பேச்சுவார்தை நடத்தி, சாலை மறியலை கைவிடச் செய்தனர். 
பெண் நீதிபதியை கண்டித்து செவ்வாய்க்கிழமை முதல் நிலக்கோட்டை தாலுகா குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர்கள் காலவரையற்ற நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு, நீதிமன்ற வளாகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com