திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மற்றும் தேனி மாவட்டம், சின்னமனூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையின்போது, உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்துள்ள தருமத்துப்பட்டி பகுதியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் தலைமையில், நிலையான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவினர், செம்பட்டி ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் வந்த காரை மறித்து சோதனையிட்டனர்.
அந்த காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.1.22 லட்சம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவர் மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த ராஜபாண்டி (48) என்பதும், பெருந்துறைக்கு பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்த கண்காணிப்புக் குழுவினர் அப்பணத்தை ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
சின்னமனூரில்: தேனி மாவட்டம், சின்னமனூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேது உள்ளிட்டோர் சீலையம்பட்டி சாலையில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கூடலூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சபீர் (35), வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், ரூ.1.40 லட்சம் கொண்டு செல்லப்பட்டதும், அதற்கு ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. அதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.