பழனி அருகே 12 வயது சிறுமி கர்ப்பமான விவகாரத்தில், சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவர் வெள்ளிக்கிழமை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நடத்திய சோதனையில் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வியாழக்கிழமை சிறுமிக்கு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புகாரின் பேரில் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமானவர்கள் குறித்து பழனி தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவர் காமராஜ் (53) சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் முதல் கணவரை பிரிந்து மகளுடன் பெத்தநாயக்கன்பட்டிக்கு வந்த தாயார், காமராஜூடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது காமராஜ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து போலீஸார் வெள்ளிக்கிழமை காமராஜை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.