பழனியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன.
இந்நிலையில், பழனி ரயிலடி சாலையில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பாக புதிய தமிழகம் கட்சியின் பெயர்ப் பலகை திறக்கப்பட்டது. அதன்பின்னர், கட்சியின் செயற்குழுக் கூட்டம் அதே சாலையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் முனியப்பன், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் சுந்தர்ராஜ், நகரச் செயலர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார்.
இதில், மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற பாடுபடுவது என்றும், தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.