கொடைக்கானல் நகராட்சி ஆணையாளருக்கு வெள்ளிக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணியை கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கும் சீல் வைப்பதற்கும் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே விதிமீறி கட்டப்பட்ட விடுதிகள், காட்டேஜ்களை சீல் வைத்தபோது நகராட்சி ஆணையாளரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக பல சம்பவங்கள் நடந்தன.
அதையடுத்து, தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்பேரில், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை முதல் நகராட்சி ஆணையாளருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.