பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சனிக்கிழமை பழனியாண்டவருக்கு தீர்த்தக்காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
பங்குனி உத்திரக் கொடியேற்ற நாளை முன்னிட்டு தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை சார்பில் ஏராளமானோர் வெள்ளிக்கிழமை கொடுமுடி சென்று தீர்த்தம் முத்தரித்து இரவு பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்தனர். சனிக்கிழமை காலை தீர்த்தக்காவடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பழனி மலைக்கோயிலுக்கு காவடிகள் மேளதாளத்துடன் புறப்பாடு செய்யப்பட்டது. பழனி திருஆவினன்குடி கோயில் சென்று, பின்பு மலையேறிய காவடிகளுக்கு சிறப்பு யாகபூஜைகளும் செய்யப்பட்டன. பின்னர் காவடிகள், மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு உச்சிக்காலத்தின் போது அபிஷேகம் செய்யப்பட்டது.
காவடி செலுத்தியபின் அடிவாரம் ஸ்ரீலஸ்ரீ சட்டிசுவாமிகள் மடாலயத்தில் சிறப்பு பொது அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.