நிலக்கோட்டையில் தந்தை வாங்கிய கடனை மிரட்டி வசூல் செய்வதற்காக, அவரது மகனை பள்ளியில் இருந்து கடத்த முயன்ற 2 இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் அனோஜோஸ்வா (13). நிலக்கோட்டை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் ராஜா (26) மற்றும் ஜான் பெர்க்மோனஸ் (33) ஆகியோர், அனோஜேஸ்வா படிக்கும் பள்ளிக்கு சனிக்கிழமை சென்றுள்ளனர்.
மாணவர் அனோஜோஸ்வாவின் தந்தை அமல்ராஜுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளனர். அதனால் அனோஜோஸ்வாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளதாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பள்ளி முதல்வர் ஜெயசங்கர், செல்லிடப்பேசி மூலம் அமல்ராஜை தொடர்பு கொண்டு பேசிய போது, தன்னுடைய உடல் நிலை நன்றாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பள்ளி முதல்வரின் நடவடிக்கைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு வந்த இருவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான 2 பேரின் உருவங்களையும், மாணவர் அனோஜோஸ்வாவிடம் பள்ளி நிர்வாகிகள் காட்டியுள்ளனர். இதனையடுத்து, சங்கராபுரத்திற்கு திரும்பிச் சென்ற சாலமன் ராஜா மற்றும் ஜான் பெர்மோனஸ் ஆகிய இவரையும் கிராமத்தினர் பிடித்து, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் ரூ.40 ஆயிரம் கடனாக பெற்ற அமல்ராஜ் , அதனை திருப்பி தராததால் அவரது மகனை கடத்த முயன்றதாக சாலமன் ராஜா, ஜான் பெர்மோனஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.