பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (மார்ச் 20) திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் வெள்ளித்தேரோட்டமும், வியாழக்கிழமை (மார்ச் 21) பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் 15-ஆம் தேதி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பாதயாத்திரையாக பழனி வந்து மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். திருஆவினன்குடி கோயில் வளாகத்தில் தீர்த்தக்காவடியுடன் ஆண்களும், பெண்களும் மேளதாளத்துடன் ஆடுவது பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தந்தசப்பரம், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சன்னதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளினார். முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. மார்ச் 24-ஆம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.