திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்துள்ள குண்டலப்பட்டி பிரிவு பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா தலைமையிலான தேர்தல் பறக்கும்படைக் குழுவினர் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அணைப்பட்டி- நிலக்கோட்டை சாலையில் வந்த காரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணமின்றி ரூ.6.80 லட்சம் எடுத்துச் செல்லப்படுவது கண்டறியப்பட்டது. விசாரணையில், காரில் வந்தவர் விருவீடு அடுத்துள்ள சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த உதயக்குமார் என தெரிய வந்தது. நிலக்கோட்டையில் மதுபானக் கூடம் நடத்தி வரும் அவர், மதுபானக் கூட உரிமம் புதுப்பிப்பதற்காக பணத்தை எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.6.80 லட்சத்தையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை நிலக்கோட்டை சார் நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.