பழனி அருகே சனிக்கிழமை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மலேசியாவைச் சேர்ந்த தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவர் மலேசியாவில் எண்டர்பிரைசஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி (40) என்ற மனைவியும், சஞ்சய் (15), பழனி (11), சரவணன் (11) ஆகிய மகன்களும், சங்கவி (8), மஞ்சிகா (6) ஆகிய பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஈஸ்வரி தனது மகன்கள் மற்றும் மகள்களுடன் மலேசியாவில் இருந்து சனிக்கிழமை அதிகாலை பழனி கோயிலுக்கு வந்துள்ளார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மாலையில் பழனி அருகேயுள்ள வரதமாநதி அணைக்கு வாடகைக் காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.
பழனி-கொடைக்கானல் சாலையில் வரட்டாறு பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈஸ்வரி, மகன் சஞ்சய், கார் ஓட்டுநர் பாலகிருஷ்ணன்(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சிறுவன் பழனி (10) மற்றும் சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் ஆகியோரை பழனி தாலுகா போலீஸார் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், மலேசியாவில் இருந்து வந்தவர்களை பழனி அடிவாரத்தை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் (35) பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதும், அவர்கள் சென்ற காரை, பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்ற போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய சரவணன், சங்கவி, மஞ்சிகா ஆகிய 3 பேரையும் போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.