திண்டுக்கல் அருகே நகைக்கடை ஊழியரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாணார்பட்டி காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள லட்சுமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். திண்டுக்கல் பகுதியிலுள்ள நகைக் கடையில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில், ஹரிகிருஷ்ணனை மறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஹிரிகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாணார்பட்டி காவல் நிலையத்தை லட்சுமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து, முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.