கொடைக்கானலில் மே தினமான புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல்,மே மாதங்கள் சீசன் நாள்கள் ஆகும். இந்நாள்களில் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக, மே தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவர். ஆனால் நிகழாண்டில் கொடைக்கானலில் சுற்றுலா இடங்களில் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
கோக்கர்ஸ்வாக் பகுதியில் கடந்த ஆண்டு மே தினத்தில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடந்தாண்டில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக நுழைவு கட்டணம் மூலம் வருவாய் கிடைத்தது. அதே போல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இயக்கப்படும் படகு மூலம் கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்திற்கும் மேலாக கட்டணம் வசூலானது. இது போல பில்லர்ராக், குணா குகை, மோயர் பாயிண்ட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது வருவாய் வெகுவாக குறைந்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறியது,: கடந்த 40 ஆண்டுகளாக கொடைக்கானலில் மே தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஆனால் நிகழாண்டில் வானிலை ஆய்வு மையம் "பானி' புயல் ஏற்படும் என அறிவித்தது.
மேலும் கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் ஆகியவற்றில் சுமார் 60 சதவீதம் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்க முடியாமல் சுற்றிப் பார்த்து விட்டு ஒரே நாளில் திரும்பிச் செல்கின்றனர்.
மேலும் மே தினம் புதன்கிழமை வந்ததாலும், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது என்றனர்.