மலேசிய நாட்டில் நடைபெறும் இலங்கை எழுத்தாளரின் நூல் வெளியீட்டு விழாவில் காந்திகிராமப் பல்கலை.யின் தமிழ்த்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார் பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக பல்கலை. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பா.ஆனந்தகுமார், மலேசியாவின் ஈப்போ மாநிலம் மேரு நகரில் நடைபெறும் கண்டிச்சீமை' எனும் நாவல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்துகிறார்.
"கண்டிச்சீமை' நாவலை ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மலையக எழுத்தாளர் மாத்தளை சோமு எழுதியுள்ளார். இந்நாவல் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து ஆங்கிலேயர்களால் இலங்கை கண்டித் தேயிலை தோட்டத்திற்கு கூலிகளாய் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் துயர வாழ்வை ஆவணப்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (மே 4) நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் நடைபெறும் கண்டிச்சீமை
நாவல் அறிமுக விழாவிலும் பேராசிரியர் பா.ஆனந்தகுமார் பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.