நிலக்கோட்டையில் ஆட்டோ கவிழ்க்கப்பட்டதில் காயமடைந்த பெண் உயிரிழந்ததை அடுத்து, நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை துள்ளுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(55). இவர் சனிக்கிழமை காலமானார். இதையடுத்து இவரது இறுதி ஊர்வலத்தின்போது, செம்பட்டியிலிருந்து நிலக்கோட்டை நோக்கிச் சென்ற ஆட்டோ இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் மீது உரசிவிட்டுச் சென்றதாம்.
இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேர் அந்த ஆட்டோவை கவிழ்த்துள்ளனர். இதில் ஆட்டோவில் பயணம் செய்த மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மலர் ராஜா மனைவி முத்தம்மாள் (48) காயமடைந்தார். இதையடுத்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன், துள்ளிப்பட்டியைச் சேர்ந்த ரவி மகன் அஜித்குமார் (35), சுரேஷ் மகன் மதிவாணன்(25), குருசாமி மகன் வேலன் (17) ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து அஜித்குமார் மற்றும் மதிவாணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.