முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானலில் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
By DIN | Published On : 15th May 2019 06:56 AM | Last Updated : 15th May 2019 06:56 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அக்கட்சி நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக திங்கள்கிழமை இரவு கொடைக்கானலுக்கு வந்த கமல்ஹாசன் பாம்பார்புரம் பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அங்கிருந்து புறப்பட்டு கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளம் பகுதியிலுள்ள தனது எஸ்டேட்டில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜ் என்பவருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த 12 ஆம் தேதி இரவு அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளபட்டி ஷா கார்னர் உள்ளிட்ட இடங்களில் "டார்ச் லைட்' சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது, பள்ளபட்டி ஷா கார்னரில் பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன்.
அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்றார். இவ்வாறு இந்து மதத்தினரை இழிவுபடுத்திப் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு கட்சியினர், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியுள்ளார். கமல்ஹாசன் தங்கியுள்ள நட்சத்திர விடுதியில் பல மணி நேரம் செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
மேலும் அவர் கொடைக்கானலிலிருந்து மதுரைக்கு புதன்கிழமை பிற்பகல் செல்வார் என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.