கொடைக்கானலில் கல்வியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு சன் அரிமா சங்கம் சார்பில் பாராட்டு விழா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சன் அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவர் டி.பி.ரவீந்திரன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ் .தேர்வில் வெற்றி பெற்ற பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி தீபனா விஸ்வேஸ்வரிக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், பிட்ஜெட் ஸ்பின்னர் விளையாட்டில் கின்னஸ் சாதனை புரிந்த மாணவர் பிரசன்னா, சன் அரிமா சங்கம் சார்பில் நிதி உதவி பெற்று கணினியில் பட்டம் பெற்ற 7-மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை அரிமா சங்க ஆளுநர் பாரி பரமேஸ்வரன் வழங்கினார். முன்னதாக சங்கத் தலைவர் அருண்ரவீந்திரன் வரவேற்றார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆஷா ரவீந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சங்க செயலர் அப்பாஸ், பொருளாளர் திரவியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.