திண்டுக்கல்லில் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளி மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருவாச்சி ஆறுமுகம்(40). இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திண்டுக்கல்-மதுரை சாலையில் நாகல் நகர் ரவுண்டானா அடுத்துள்ள அரண்மனை குளம் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றார். அப்போது மர்ம நபர்கள் சிலர் கருவாச்சி ஆறுமுகத்தை பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.